மழைநீர் வடிகாலில் விழுந்து இளைஞர் பலி.! தடுப்புகள் அமைக்கவில்லையென்றால் அபராதம்.! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

By Ajmal KhanFirst Published Oct 24, 2022, 9:03 AM IST
Highlights

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும்படி சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

மழைநீர் வடிகால்- இளைஞர் பலி

சென்னை காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தனியார் தொலைகாட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த 24 வயதான முத்துகிருஷ்ணன் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இதற்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சென்னை பெருநகர மாநகராட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் கடந்த பருவமழையின் போது மழைநீர் தேங்கிய இடங்கள் மற்றும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டு அவ்விடங்களில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அமைக்கப்பட்ட சென்னை வெள்ள தடுப்பு மேலாண்மை குழுவின் பரிந்துரைகளின்படி பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. 

மழைநீர் வடிகால் பணி

அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2 ன் கீழ் ரூ.277.04 கோடி மதிப்பில் 60.83 கிலோ மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடி மதிப்பில் 107.57 கிலோ மீட்டர் நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடி மதிப்பில் 10 கிலோ மீட்டர் நீளத்திற்கும் மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடி மதிப்பில் 105 கிலோ மீட்டர் நீளத்திற்கும் மாநகரின் பிராதன பகுதிகளில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் மழைநீர் வெளியேற ஏதுவாக மூடிய பெருவடிகால் அமைக்கும் பணிகளும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலை துறையின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் ரூ. 90.45 கோடி மதிப்பீட்டில் 12.75 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

கோவை கார் வெடிப்பு விவகாரம்... உயிரிழந்தவர் வீட்டில் வெடிமருந்துகள்... டிஜிபி அதிர்ச்சி தகவல்!!

தடுப்புகள் அமைக்க வேண்டும்

பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடங்கள் மற்றும் சேவை துறைகளான தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதைவட கம்பிகள் அமைக்கும் பணி மற்றும் குழாய் பதிப்பு பணிகள் தொடர்பான இடங்களிலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்புகள் அமைக்க ஏற்கனவே அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் இடங்களில் தடுப்புகள் அமைப்பதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் அதனை முறையாக பின்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு சில இடங்களில் தடுப்புகள் அமைக்காத ஒப்பந்ததாரர்கள் மீது மாநகராட்சியின் சார்பில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

தடுப்புகள்- அபராதம்

இது தவிர சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைக்கப்படாத இடங்கள் குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அவ்விடங்களிலும் உடனடியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது சம்மந்தப்பட்ட பொறியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இனி வரும் காலங்களில் மழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக நிரந்தர தீர்வினை ஏற்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் குறுகிய காலத்தில் போர்க்கால அடிப்படையில் சென்னையில் மட்டும் ரூ. 575269 கோடி மதிப்பீட்டில் 1366,08 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

திமுக அரசின் அலட்சியமே இளம் பத்திரிக்கையாளர் இறப்பிற்கு காரணம்... சசிகலா குற்றச்சாட்டு!!

புகார் செய்யலாம்- மாநகராட்சி

எனவே மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பொதுமக்கள் செல்லும்போது தடுப்புகளுக்கு இடையே கடந்து செல்லாமல் முறையாக தடுப்புகளை சுற்றி கடந்து செல்லவும், பாதுகாப்பாக செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழைநீர் வடிகால் மற்றும் பிற சேவை துறைகளின் சார்பில் சாலை மற்றும் தெருக்களில் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் தடுப்புகள் இல்லாத இடங்கள் குறித்து பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

கோவை சிலிண்டர் வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே காரணம்.! வெளிநாட்டு சதி.! மூடி மறைக்கும் திமுக- அண்ணாமலை ஆவேசம்

click me!