புதுக்கோட்டை
தூத்துக்குடியில் காவலாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் படங்களை வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி புதுக்கோட்டையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் நேற்று நடைப்பெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவலாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
நாட்டிலேயே பங்கர கலவரமாக பார்க்கப்பட்ட இதில் இதுவரை 12 பேர் அநியாயமாக உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தமிழக அரசு செய்த இந்த வன்செயலை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள், இளைஞர்கள் கொதித்து போய் உள்ளனர். அரசை விமர்சித்து வரும் மீம்ஸ்களும் வருகின்றன. "அதிமுகவை பாஜகவின் சொம்பு தூக்கி என்றும், உங்களை சுட்டுவிட்டு 10 இலட்சம் நிவாரணம் நாங்கள் தருகிறோம் வாங்கிக் கொள்கிறீர்களா?" என்பது போன்ற மீம்ஸ்களால் எடப்பாடி அரசு கடுமையாக அதிருப்திகளை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இதுவரை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 12 பேரின் படங்களும் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டு மெழுகுவர்த்தி ஏந்தி இப்பகுதி இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோன்று, கொத்தமங்கலத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.