டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு
தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், பார் உரிமங்கள் வழங்கியது, மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் 1000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு
இந்நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களையோ துன்புறுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதிகள் திடீர் விலகல்
இந்த மனுக்களை முதலில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு எந்தவித காரணமும் தெரிவிக்காமல் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக கடந்த மார்ச் 25ம் தேதி அறிவித்தனர். பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய புதிய அமர்வு விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் அடுத்த விசாரணை வரும் 8ம் தேதி அதாவது இன்றைக்கு நடக்கும் என்று அறிவித்தனர்.
வேறு அமர்வுக்கு மாற்ற கோரிக்கை
ஆனால் டாஸ்மாக் வழக்கு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கே.ராஜசேகர், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் சகோதரர் என்பதால் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
இதனிடையே திடீர் திருப்பமாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்தது. அதில், டாஸ்மாக் தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து, வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் ஒன்றில் நிலுவையில் இருக்கும் ஒரு வழக்கை வேறு ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோருவதை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 139ஏ அனுமதிக்கிறது. இந்த பிரிவின் கீழ்தான் தமிழ்நாடு அரசு மனு செய்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா? அல்லது தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தெரியவரும்.