அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவியின் TVH குழுமத்தில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. ரவியின் வங்கி கணக்கிலிருந்து அதிக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ED raids Tamil Nadu Minister K N Nehru house : அமலாக்கத்துறை சோதனை மீண்டும் தமிழகத்தை குறிவைத்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டில் தொடர் சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை நள்ளிரவில் கைது செய்தது. இதனையடுத்து அமைச்சர் பொன்முடி வீட்டிலும் சோதனை மேற்கொண்டு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி விடுவித்தது.
இந்த நிலையில் இன்று தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சராக உள்ள கே.என்.நேருவை அமலாக்கத்துறை குறி வைத்துள்ளது. அந்த வகையில், சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவியின் TVH குழுமம் கட்டுமான நிறுவனத்தில் 10க்கும் இடங்களில் இன்று காலை முதல் திடீரென அமலாக்கத் துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேருவின் சகோதரரின் வீடு அலுவலங்களில் சோதனை
அடையாறு, பெசன்ட் நகர் ,எம் ஆர் சி நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை ,சிஐடி காலனி ஆகிய 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுக அமைச்சர் கே .என். நேருவின் சகோதரர் ரவியின் வங்கி கணக்கிலிருந்து அதிகபடியான பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் அடிப்படையில் சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தற்போது முதற்கட்ட தகவல் தகவல் கூறப்படுகிறது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற TVH அலுவலகத்தில் வருமான வரித்துறை சார்பில் சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராத 100 கோடி ரூபாய் பணம் மற்றும் 90 சவரன் நகை கைப்பற்றப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
திருச்சியிலும் தொடரும் சோதனை
இதே போன்று தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது திருச்சி மாநகர் தில்லை நகர் 5வது சாலையில் அமைந்துள்ள அமைச்சர் நேருவின் வீடு. அவரது மகனும் எம்பியான அருண் வீடு மற்றும் அவரது சகோதர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நேருவின் வீட்டிற்கு இன்று காலை 3 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பிற்காக மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும் அலுவலகங்களில் கணக்கில் வராத பண பரிமாற்றம் குறித்தும் சோதனை செய்தது. இதனையடுத்து தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.