கர்பிணிகளுக்கு அதிகம் தடுப்பூசி செலுத்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடம்… மா.சுப்ரமணியன் பெருமிதம்!!

By Narendran SFirst Published Dec 26, 2021, 2:42 PM IST
Highlights

இந்தியாவிலேயே கர்பிணிகளுக்கு அதிகம் தடுப்பூசி செலுத்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலேயே கர்பிணிகளுக்கு அதிகம் தடுப்பூசி செலுத்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஓமைக்கரான் கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துதலை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழகம் முழுதும் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 15 கட்டமாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 16வது கட்ட முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டாவது தவணை செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக சனிக்கிழமையன்று நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு பிறப்பையொட்டி இரு வாரங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 16வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதனையொட்டி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சைதாப்பேட்டை சட்டமன்ற  தொகுதிக்குட்பட்ட கிண்டி மடுவிங்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் சுமார் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக தெரிவித்தார். சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாகவும், இன்று சென்னையில் 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த சென்னை மநகராட்சி இலக்கு நிர்ண்யித்திருப்பதாகவும் தெரிவித்தார். மொத்தம் 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாகவும், அவர் கூறினார்.

தமிழகத்தில் இதுவரை 8.14 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் 84.87% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 55.85% பேர் 2 ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர் என்று தெரிவித்தார். தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 12 பேரு குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறிய அமைச்சர் 22 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே கர்பிணிகளுக்கு அதிகம் தடுப்பூசி செலுத்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், எனவே அனைவரும் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ஜனவரி 3 ம் தேதி முதல் 15 லிருந்து 18 வயது உடைய 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்றும், ஜனவரி 10 ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் 9.78 லட்ச முன்களப் பணியாளர்களுக்கும்  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

click me!