தேனியில் அதிமுக பிரமுகர் மீது வழக்கு..யாருக்கான எச்சரிக்கை..? சூடாகும் அரசியல் களம்

By Thanalakshmi VFirst Published Dec 26, 2021, 12:11 PM IST
Highlights

தேனிமாவட்டத்தில் சுமார் 100 ஏக்கர் அரசு நிலங்களை அதிகாரிகள் துணையுடன் அபரிக்க முயன்ற வழக்கில் பழனி ஆர்.டி.ஓ , திருச்சி சப் கலேக்டர் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு நிலங்களை பெரியகுளம் பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்னபிரகாஷ் என்பவர் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து பெரியகுளம் துணை ஆட்சியர் ரிஷப் விசாரணை நடத்தியுள்ளார். இந்த விசாரணையில் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் சுமார் 109 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருந்த அன்னபிரகாஷ் மற்றும் சிலர் அபகரித்ததாக தெரியவந்தது. இந்த நிலத்தின் அரசு மதிப்பு 1 கோடியே 44 லட்சத்து 13 ஆயிரம் என கணக்கிடப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி யிடம் தனித்தனியாக 3 புகார்களைப் பெரியகுளம் சப்-கலெக்டர் கொடுத்தார். அந்த புகார்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி சுந்தர்ராஜ் விசாரணை நடத்தினார். விசாரணையைத் தொடர்ந்து இந்த மோசடி நடந்த காலகட்டத்தில் பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ-க்களாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவை உதவியாளர் அழகர், மண்டலத் துணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஷ்கண்ணன், நிலத்தை அபகரித்த அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் உட்பட பலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இதில், ஆனந்தி தற்போது பழனி ஆர்.டி.ஓ.வாக பணியாற்றி வருகிறார். ஜெயப்பிரிதா திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை கலெக்டராக பணியாற்றி வருகிறார். தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல் ஆகியோர் ஏற்கெனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அதுபோல் பெரியகுளம் அருகே உள்ள  தாமரைக்குளத்தில் 60 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் 60 ஏக்கர் அரசு நிலம், கெங்குவார்பட்டியில் 8 கோடியே 62 லட்சம் மதிப்பில் 13 ஏக்கர் அரசு நிலத்தையும் அதிகாரிகள் துணையுடன் சிலர் அபகரித்ததும்  விசாரணையில் தெரியவந்தது. இந்த 3 இடங்களிலும் சேர்த்து பெரியகுளம் சுற்றியுள்ள சுமார் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, அரசு நிலங்களாக மாற்றப்பட்டன.மேலும் அரசு நிலங்களை ‘அ' பதிவேட்டில் கணினி மூலம் திருத்தம் செய்து, கணினி பட்டா வழங்கப்பட்டதும், அதன் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

click me!