மூடும் நிலையில் தமிழ்வழிப் பள்ளி! திருப்பதிவாழ் தமிழ் மக்கள் வேதனை...

First Published Jun 23, 2017, 7:52 AM IST
Highlights
Tamil school will be closed at andra


ஆந்திராவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வி முறையில் இயங்கிவரும் பள்ளிக்குப் புதியதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் அந்தப் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதி லட்சுமிபுரம் கென்னடி நகரில் தமிழ் உயர்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. 1969ஆம் ஆண்டு தமிழ் ஆர்வலர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரையுள்ள இந்தத் தமிழ்ப் பள்ளியைத் தொடங்கினர். அதற்குப்பின் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. 48 ஆண்டுகளாக இயங்கி வந்தது.

கடந்த ஆண்டு வரை இப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வந்தநிலையில், இந்த ஆண்டு பள்ளிக்குப் புதியதாக ஆசிரியர்கள் நியமிக்காததால் 8, 9, 10 ஆகிய வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற ஏழாம் வகுப்பு மாணவ - மாணவியர் ஒன்பது பேருக்கு இப்பள்ளியில் படிக்க ஆர்வம் இருந்தும் ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளியில் சேர்ந்தனர்.

இந்த ஆண்டு வெறும் 38 மாணவர்கள் மட்டுமே படித்து வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் இந்தப் பள்ளியை மூடும் நிலை ஏற்படும் என்று திருப்பதி தமிழ் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் தெலுங்கு மாணவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைத் தமிழக அரசு 
தொடர்ந்து நடத்திவருகிறது. இதேபோல திருப்பதியில் வாழும் தமிழர்களின் பிள்ளைகள் தமிழில் பாடம் படிக்க ஆசிரியரைப் பணியமர்த்த ஆந்திர அரசை வலியுறுத்த வேண்டும்” என்று ஆந்திரவாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!