
தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தொழில்நுட்ப கல்வியை ஊக்குவிக்கவும் கல்வி உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டது. தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு உதவும் திட்டங்கள், பயிற்சி முடித்தவர்களுக்கு தொழிற்சாலைகளில் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.07.2025 வரை வழங்கப்பட்டது.தற்பொழுது மாணவர்களின் நலன் கருதி 31.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள் (Shoes), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.
தொழிற்பயிற்சிகள்
சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 80% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்
இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் - 9499055642, வாட்ஸ்அப் எண் - 9499055618 என தெரிவிக்கப்பட்டுள்ளது.