
பாஜக முன்னாள் எம்எல்ஏ காலமானார்
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக கால் பதிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல தேர்தலை எதிர்கொண்டு தோல்வி அடைந்தாலும், தமிழகத்தில் இருந்து பாஜக சார்பாக முதல் சட்டமன்ற உறுப்பினர் சி.வேலாயுதம் ஆவார். இவர் கடந்த 1996ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது பதவி காலத்தில் அப்பகுதி மக்களின் நல திட்டங்களுக்காக பல்வேறு வகையில் உழைத்துள்ளார். குறிப்பாக ராமர் கோயில் கட்டுவதற்கான ஆதரவு கோரி கையெழுத்து இயக்கத்தையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தலைவர்கள் இரங்கல்
இந்தநிலையில் வயது மூப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானார். இது தொடரபாக தமிழக பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த ஸ்வயம் சேவகரும், சமூக சேவகருமாகிய திரு.C.வேலாயுதம் அவர்கள் காலமானார். இவர்,
1996 தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்ற வேட்பாளர் ஆவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மறைந்த சட்டமன்ற உறுப்பினர் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.