விஸ்வரூபம் எடுக்கும் குட்கா விவகாரம்….!!! சிபிஐயில் அறப்போர் இயக்கம் புகார்…

First Published Jul 8, 2017, 7:03 AM IST
Highlights
take action will be on government officers about kutka issue by arappor iyakkam report to cbi


தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட குட்கா பொருட்களை லஞ்சம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்ய அனுமதி அளித்தாக எழுந்த புகாரில் அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் மத்திய ,மாநில  அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அறப்போர் இயக்கம் கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கம் எழுதியுள்ள கடிதத்தில், குட்கா விவகாரத்தில் மத்திய மாநில அரசு அதிகாரிகள் மிகப் பெரிய அளவில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, குட்கா உற்பத்தியாளர்களுக்கு அதனை தமிழகத்தில் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளார்கள் என்றும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் சிபிஐ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு குட்கா, போதை தரும் புகையிலைப் பொருட்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இத்தகைய பொருட்களை ஸ்டாக் வைத்திருக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசும் தடைவிதித்தது.

உணவு பாதுகாப்பு துறை இதை தொடர்ந்து கண்காணித்து குட்கா பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் வருமான வரித்துறை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குட்கா கொடோன்களில் அதிரடியாக நடத்திய சோதனையில் அதிர்ச்சி தரும் சில ஆவணங்களை கைப்பற்றியது.

அதில் குட்காவை தமிழகத்தில் தடையின்றி விற்பனை செய்ய  யார் யாருக்கு எவ்வளவு  லஞ்சம் வழங்கப்பட்டது என்று கணக்கு வழக்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கருக்கு ஏப்ரல் 2016  முதல் ஜுன் 2016 வரை மாதம் 16 லட்சம் கொடுக்கப்பட்டதாகவும், 2 கலால் வரித்துறை அதிகாரிகளுக்கு 16 லட்சமும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெக் ஹில்ஸ் உதவி ஆணையருக்கு 30 லட்சம் ரூபாயும், சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு 14 லட்சம் ரூபாயும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு 35 லட்சம் ரூபாயும், சென்னை கால் துறை ஆணையருக்கு 60 லட்சம் ரூபாயும் அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக 15 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததை அறப்போர் இயக்கம் தங்களது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.

இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்போது தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவுக்கு கடிதம் அனுப்பி இருந்தது.

ஆனால் அவர் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுத்த வேண்டும் என்று காவல் ஆணையர் ஜார்ஜே தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது கேலிக்குரியது என்றும் அற்ப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உரிய விரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கடந்த 29.8.2017 அன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அறிவித்திருத்ததையும் அறப்போர் இணக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தடை செய்யப்பட் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் தொடர்புடையதாக கூறப்படும் அமைச்சர் விஜய பாஸ்கர், டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ், மாநகராட்சி அதிகாரிகள், கலால் வரித்துறை அதிகாரிகள், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அமைச்சர், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், உரிய நீதி கிடைக்க  சிபிஐ அமைப்பே விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

click me!