நீலகிரி
பணிநிரந்தரம் செய்யும்வரை போராட்டங்கள் தொடரும் என்று தபால் துறை ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம், கூட்டமைப்பு தபால் ஊழியர் சங்கம் சார்பில், இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தேசிய அளவிலான காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், கிராமப் பகுதிகளில் உள்ள 30 கிளை தபால் அலுவலகங்கள், 21 துணை தபால் அலுவலகங்களில் பணிபுரியும் 363 கிராம அஞ்சல் ஊழியர்கள் மற்றும் தபால் அனுப்பும் ஊழியர்கள், கிளை போஸ்ட்மேன், துணை அஞ்சலக அதிகாரி என மொத்தம் 560 பேர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
"கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்,
கிராம அஞ்சல் ஊழியர் சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவினை உடனே வெளியிட வேண்டும்" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி மத்திய தபால் அலுவலகம் முன்பு நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அஞ்சல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் சந்திரன், நிர்வாகிகள் ஜெயக்குமார், ஆஷா பிரியா, துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து அஞ்சல் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமு,, "கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் தலைவர் கமலேஷ் சந்திரா குழு கொடுத்த பரிந்துரைகளை, ஓராண்டாகியும் இதுவரை மத்திய அரசு மந்திரி சபையில் ஒப்புதல் பெறவில்லை. இதனால் கிராம அஞ்சல் ஊழியர்கள் மோசமான நிலையில் உள்ளனர்.
புறநிலை ஊழியர்களாக பணிபுரியும் கிராம அஞ்சல் ஊழியர்களை தபால் துறையின் நிரந்தர ஊழியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். எங்களது காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும்" என்று அவர் கூறினார்.