
நீலகிரி
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியானது குறித்து ஊட்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு கையை உயர்த்தி வணக்கம் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் காவலாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பங்கேற்றார்.
இந்த விழாவின்போது, ஆதிவாசி மக்களின் பாரம்பரிய நடனங்களை காண்பதற்காக மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தார்.
அப்போது அவரிடம் செய்தியாளர்கள், "துப்பாக்கி சூடு தொடர்பாக அரசு உங்களுக்கு என்ன தகவல் கொடுத்திருக்கிறது? அது குறித்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கையை உயர்த்தி வணக்கம் தெரிவித்துவிட்டு, கோப்பை மற்றும் பரிசுகளை வழங்குவதற்காக மேடைக்கு சென்றார்.
அதனைத் தொடர்ந்து நிறைவு விழா முடிந்து புரோகித் புறப்படும்போது, அவர் வரும் வழியில் செய்தியாளர்கள் மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 9 பேர் இறந்து உள்ளனர். இதுகுறித்து அரசிடம் என்ன விளக்கம் கேட்டிருக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பன்வாரிலால் புரோகித் பதில் எதுவும் கூறாமல், காரில் ஏறி ராஜ்பவனுக்கு சென்றுவிட்டார்.
பின்னர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செய்திக்குறிப்பு வெளியிட்டார். அதில், "தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலியான செய்தியை அறிந்து எனது மனம் கவலையில் நிறைந்துள்ளது.
இதில் பலியானவர்களின் ஒவ்வொரு குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழகத்தில் அமைதி நிலவ, மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.