
வேலூரில் 60 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 4600 நூல்கள் கொண்ட நடமாடும் நூலக சேவையை தொடங்கி வைத்தார் ஆட்சியர் ராமன்.
வேலூர் மாவட்டம், மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் நூலக சேவை வாகன தொடக்க விழா நடைப்பெற்றது.
இந்த விழாவில் ஆட்சியர் ராமன் பங்கேற்று நூலக சேவையைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:
“வேலூர் மாவட்ட நூலக ஆணைக் குழுவில் செயல்படும் நூலகங்களை அருகில் உள்ள அரசு பள்ளிகளுடன் இணைக்கும் திட்டமான வகுப்பறை நூலக திட்டம் நீண்டகாலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டம் நூலக பணியாளர்கள் மூலம் அருகில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதத்திற்கு இரண்டு முறை 50 நூல்கள் வீதம் 100 நூல்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கி, திரும்பப் பெறப்பட்டு மாதாமாதம் நூல்கள் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வகுப்பறை நூலகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடமாடும் நூலகம் செயல்படாத ஊர்களில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில் இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் தமிழ்நாட்டில் முதல் முறையாக வேலூர் மாவட்டத்தில் மூஞ்சூர்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடமாடும் நூலகத்தினை பள்ளி மாணவர்களுக்கும் செயல்படுத்தும் படியான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மாவட்டத்தின் தலைநகரான வேலூரை ஒட்டி உள்ள 60 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, பொது அறிவை வளர்க்கக் கூடிய நூல்களை படித்து பயன்பெற ஊக்குவிக்க வேண்டும். இந்த நடமாடும் நூலகத்தில் ஒரு மூன்றாம் நிலை நூலகர் மற்றும் ஓட்டுநர் பணியாற்றி வருகின்றனர்.
நடமாடும் நூலகத்தில் சிறுவர்களுக்கான நீதிக்கதைகள், சான்றோர் வரலாறு, முன்னேற்ற கட்டுரைகள், இலக்கியம், ஆன்மிகம், பொது அறிவு உள்பட நான்காயிரத்து 600 நூல்கள் உள்ளன. இவற்றை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் பேசினார்.