S.I.R. ஐ வைத்து தப்புக் கணக்கு போடும் பாஜக-அதிமுக! விட மாட்டேன்! முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

Published : Oct 26, 2025, 01:50 PM IST
Tamilnadu

சுருக்கம்

தமிழகத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை வைத்து அதிமுகவும், பாஜகவும் தப்புக் கணக்கு போடுவதாகவும், S.I.R. ஐ சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த பட்டியல் எனக்கூறி ஜனநாயாக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதை திமுக சட்டரீதியாக எதிர்க்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாக்குரிமையை பாதுகாக்கும் கடமை

இது தொடர்பாக திமுக உடன்பிறப்புகளுக்கு முதல்வரும், திமுக தலைவருமான‌ ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், 'ஜனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெருங்கடமையும் பொறுப்பும் திமுகவுக்கு உள்ளது. S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தைத் தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப் போவதாகத் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பாஜகவின் கைப்பாவை தேர்தல் ஆணையம்

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் பறித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலும் அதே குறுக்குவழியைப் பின்பற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாகத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறது என்பதை திராவிட முன்னேற்றக் கழகமும் இந்தியா கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

அதிமுக, பாஜகவின் தப்புக் கணக்கு

உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை S.I.R. மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.கவும் வெற்றிபெற்றுவிடலாம் எனக் கணக்கு போடுகிறார்கள். அதாவது, நேரடியாகத் தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் வலிமையில்லாதவர்கள், மக்களின் வாக்குரிமையைப் பறித்துவிட்டு வெற்றி பெறலாம் எனப் போடுகின்ற கணக்கு என்பது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தப்புக்கணக்காகத்தான் ஆகும்.

சட்டரீதியாக எதிர்கொள்வோம்

S.I.R. முறையைக் கைவிடவேண்டும் என்பதையும், வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டுமென்றால் அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்கவேண்டும் என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அதையும் மீறி எடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளைச் சட்டரீதியாக எதிர்கொள்வதுடன், மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை திமுகவுக்கு உண்டு.

உரிமையை அடகு வைத்த அதிமுக

மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் S.I.R. செயல்பாட்டில் கண்காணிப்பாக இருந்து கழகத்தினர் கடமையாற்ற வேண்டும். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்பட அதற்கு நேரமிருக்காது.

7வது முறையாக ஆட்சி அமைவது உறுதி

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும்தான். என்னுடைய வாக்குச்சாவடியில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன் என ஒவ்வொரு கழக உடன்பிறப்பும், உறுதியேற்று, களப்பணியாற்றினால், எல்லா வாக்குச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, 2026-இல் ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைவது உறுதியாகி விடும்' என்று கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Egg Price Hike: முட்டை விலை வரலாறு காணாத உச்சம்! சிக்கன் விலையும் ஓவர்! இல்லத்தரசிகள் ஷாக்!
UPSC Scholarship: மாணவர்களுக்கு ஜாக்பாட்! மாதம் ரூ.7,500 உதவித்தொகை.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?