தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றுக்கொண்டார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பன்வாரிலாலுக்கு ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
ஆளுநர் பதவியேற்றதற்கு பின்னர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து முதல்வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு வாழ்த்து சொல்ல காத்திருந்தார். ஆனால் ஸ்டாலின் அழைக்கப்படவில்லை. அவருக்கு முன்னதாக அமைச்சர்கள், ஆளுநருக்கு வாழ்த்து சொல்ல வரிசையாக நின்றனர்.
தான் அழைக்கப்படாமல் தனக்கு முன்னால் அமைச்சர்கள் அணிவகுத்து நின்றதைக் கண்டு கொதித்தெழுந்த ஸ்டாலின், இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரிகளை கடிந்தார். ஸ்டாலின் பொங்கியெழுந்ததை அடுத்து ஆளுநருக்கு வாழ்த்து தெரிவிக்க ஸ்டாலின் அழைக்கப்பட்டார்.
இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஸ்டாலினுக்குப் பின்னர் அமைச்சர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அழுகிற புள்ளதான் பசியடங்கும் என்று ஒரு பழமொழி சொல்வார்களே... அது நினைவுக்கு வருகிறதா?