எல்லை தாண்டி மீன்பிடித்ததாகத் தமிழக மீனவர்களைக் கைது செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள இலங்கை கடற்படை இன்று காலை தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்களைக் கைது செய்வது பின்னர் விடுதலை செய்வது என்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது இலங்கை கடற்படை. கைது செய்த மீனவர்களை விடுதலை செய்தாலும் கூட படகுகளை பலநேரங்களில் விடுவதில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் இதேநிலை நீடித்துவருகிறது. இதனால் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுவிட்டு கரை திரும்புவதற்குள் தமிழக மீனவர்களின் மனம் படாதபாடு படுகிறது. இந்தியா இலங்கை மீனவர்கள் மட்டத்திலும் வெளியுறவுத்துறை உயரதிகாரிகள், இருநாட்டு அமைச்சகங்கள் மட்டத்திலும் என பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டபோதிலும் மீனவர் பிரச்னைக்குத் தீர்வு என்பதே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. 2 படகுகளையும் சிறைபிடித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுக கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.