விழுப்புரத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய சிறப்பு சிகிச்சை மையம்; நிலவேம்பு குடிநீர், பப்பாளிச் சாறு வழங்கல்…

First Published Oct 5, 2017, 8:24 AM IST
Highlights
Special Treatment Center for Dengue Disorders Landflow drinking water papaya juice supply ...


விழுப்புரம்

விழுப்புரத்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேர சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நில வேம்பு குடிநீர், பப்பாளிச் சாறு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு பரவி வருவதைப் போல விழுப்புரம் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  சமீபத்தில் மட்டும் விழுப்புரத்தில் டெங்கு பாதிப்பால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் புறநோயாளிகள் சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.வனிதாமணி, “காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த 24 நேர சிறப்பு சிகிச்சை மையத்துக்கு வரலாம். அவ்வாறு வருவோரை இங்குள்ள மருத்துவக் குழுவினர் பரிசோதித்து, காய்ச்சலின் வீரியத்தை அறிந்து உடனே சிகிச்சை வழங்குவர்.

ஆரம்ப நிலை காய்ச்சலாக இருந்தால், அதற்கான சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்படும். காய்ச்சல் தீவிரமாக இருந்தால் உள்நோயாளியாக அனுமதித்து தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்படும்.

இங்கு டெங்கு காய்ச்சலா என்பதை பரிசோதித்து சிகிச்சை அளிக்க எலிசா சோதனை, காய்ச்சல் வீரியத்தைக் குறைக்கும் மருந்துகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

இந்த மையத்தில் நில வேம்பு குடிநீர், பப்பாளிச் சாறு, ஓஆர்எஸ் கரைசலும் தினமும் வழங்கப்படுகிறது. காய்ச்சல் தொடங்கிய ஓரிரு நாளிலேயே இங்கு வந்தால், உடனடியாக சோதித்து சிகிச்சை அளிக்க முடியும்.

காய்ச்சல் பாதித்து ஒரு வாரத்தைக் கடந்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிறகு வருவதைத் தவிர்க்க வேண்டும். டெங்கு பாதிக்கப்பட்டவராக கண்டறியப்பட்டால், உடனே உள்நோயாளியாக அனுமதித்து, அவர்களுக்கு ரத்தம், ரத்த அணுக்கள் ஏற்றுவதற்கும் ரத்த வங்கிகள் தயார் நிலையில் உள்ளன. தேவையான நோய் தடுப்பு மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

காய்ச்சல் தனி வார்டில் கடந்த மாதம் 1039 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 72 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, டெங்கு தடுப்பு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கியதிலிருந்து 5 நாள்களில் 1600 பேர் காய்ச்சல் பாதிப்பில் வந்து பரிசோதித்து சிகிச்சை பெற்றுள்ளனர்.

அதில், 120 பேர் தீவிர காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 12 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சல் ஆரம்பநிலை என கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள், டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு மையத்தில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் குணமடைந்து வருகின்றனர்.
தீவிர காய்ச்சலுக்காக இயங்கும் 48 படுக்கைகள் கொண்ட தனி உள்நோயாளிகள் பகுதியும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு இதுவரை டெங்கு உயிரிழப்பு ஏதும் இல்லை. அண்மையில் கூட சிகிச்சைக்கு வந்த பெண் ஒருவர் தீவிர காய்ச்சல், அதிக ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் உயிரிழந்தார். அவருக்கு டெங்கு உறுதிப்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.

click me!