22 கிராமங்களில் விவசாய நிலங்களில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்; எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்…

First Published Oct 5, 2017, 8:03 AM IST
Highlights
Natural gas pipeline project in 22 villages Farmers fight protest against ...


வேலூர்

வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை அருகே உள்ள லாலாப்பேட்டை உள்ளிட்ட 22 கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியாக இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கான கருத்துக் கேட்பு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம், சென்னையை அடுத்த  எண்ணூரில் இருந்து கர்நாடக மாநிலம், பெங்களூருவுக்கு திருவள்ளூர், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக இராட்சத குழாய்  மூலம் இயற்கை  எரிவாயு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் அடையாளக் கற்கள் நடப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளேரி, லாலாப்பேட்டை  உள்ளிட்ட  20-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த சில மாதங்களாக லாலாப்பேட்டை, பள்ளேரி  உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இந்தியன் ஆயில்  நிறுவனம் சார்பில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு  நோட்டீஸ்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு வருவாய்த் துறை உதவியுடன்  வழங்கப்பட்டன.

இந்த நிலையில், இத்திட்டத்துக்கான கருத்து கேட்பு கூட்டம், லாலாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திட்டத்துக்கான நில எடுப்பு துணை ஆட்சியர் மதுசூதனன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன குழாய் பதிப்பு திட்டப் பொது மேலாளர் தங்கராஜ், உதவி மேலாளர் கணேஷ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும்  விவசாயிகள் பங்கேற்றனர்.

இதில் நில எடுப்பு துணை ஆட்சியர் மதுசூதனன், குழாய் பதிக்கும் நோக்கம், பயன்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

அப்போது, விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடபோவதாகவும் தெரிவித்தனர்.

 

click me!