சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப 22ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள்!

First Published Oct 19, 2017, 9:49 AM IST
Highlights
special busses arranged for chennai returning passenger up to oct 22 says transport dept officials


தீபாவளியைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து சென்றவர்கள், பண்டிகை முடிந்து இன்று முதல் சென்னைக்குத் திரும்புவர் என்பதால், சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது அரசுப் போக்குவரத்துக் கழகம். இதற்காக வரும் அக்.22ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தீபாவளியைக் கொண்டாட சென்னையில் இருந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் சுமார் 7 லட்சம் பேர் பயணித்துள்ளனராம்.  சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, நெல்லை, நாகர்கோவில், தேனி, திருச்சி, தஞ்சை, மதுரை, கோவை என பிற மாவட்டங்களுக்குச் செல்பவர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் பல இயக்கப்பட்டன.

தீபாவளிக்கு முந்தைய தினமான 17ம் தேதி மட்டும், சுமார் மூவாயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த 15, 16ஆம் தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து  5,156 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்புப் பேருந்துகளில் 1.60 லட்சம் பேர் முன்பதிவு செய்தனராம். செவ்வாய்க்கிழமை மட்டும் 46,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, தீபாவளி முடிந்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப 84,000 பேர் முன் பதிவு செய்திருந்தனராம்.

தீபாவளி நாளான நேற்று காலை வரை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம், பெருங்களத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 3.60 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்யப்படாத அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளனர். ரயில், ஆம்னி பஸ்கள் மூலம் என சுமார் 2.5 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் அரசு பஸ்களில் ஐந்தரை லட்சம் பேர் பயணித்துள்ளனர். 

சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்களால் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையங்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன. பேருந்து, ரயில்களில் கூட்டம் குறையாமல் நீடித்ததால் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், தீபாவளி முடிந்து பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்புவோரின் வசதிக்காக, தீபாவளி நாளான நேற்று 3,794 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.  இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை 7,043 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

click me!