
நண்பர்களுடன் சேர்ந்து, தனது மாமியாரை மருமகனே பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளார். இந்தச் சம்பவம், மதுரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த ஜோதி என்பவரை சில தினங்களாகக் காணவில்லை என்று அவரது உறவினர்கள் போலீஸில் புகார் செய்தனர். இந்தப் புகாரைப் பதிவு செய்த போலீஸார், இது குறித்து உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ஜோதி, தனது மகளை முடக்குச் சாலையைச் சேர்ந்த செல்வின் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தது தெரிய வந்தது. போலீஸார், ஜோதியின் மருமகன் செல்வினிடம் விசாரித்த போது, அவர் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து உரிய முறையில் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீஸாருக்கு தெரியவந்த தகவல்கள் அவர்களுக்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமியார் ஜோதியை தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக, செல்வின் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து செல்வின், அவரது நண்பர்களான அழகரடி அருண் பொன்மேனி, முகமது ஷெரீப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் கூறியபோது, மாமியார் என்றும் பார்க்காமல், ஜோதியை அவரது மருமகன் செல்வின் தனது நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரை படுகொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை, புல்லூத்து பாய்ஸ் டவுன் பகுதியில் உள்ள தோட்டத்தில் புதைத்துள்ளனர்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட ஜோதியின் உடல் இன்று தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்படுகிறது. இந்தத் தகவல் பரவியதும் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.