
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்தவர் ஜீவா (40). இவரது மனைவி ஹேமாவதி (32) இவர்களது மகள் கெஜலட்சுமி, இவர் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.. மகன் ராஜேஷ் 2 ஆம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில நாட்களாக ஜீவாவுக்கும் மனைவி ஹேமாவதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு 4வாவும், மகன் ராஜேசும் திருப்பதிக்கு சென்று விட்டு வந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் மொட்டை அடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்குள் நடந்த சண்டையால், ஹேமாவதி, தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலை ஜீவா, மகன், மகளை அழைத்துக் கொண்டு பள்ளியில் விடுவதாகக் கூறி, தனது பெற்றோரிடம் கூறிவிட்டு பைக்கில் அழைத்து சென்றிருக்கிறார்.
எப்போதும் மதியம் வீட்டுக்கு வரும் ஜீவா, வராததைக் கண்ட அவரது பெற்றோர், போன் செய்துள்ளனர். ஆனால் லைன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பள்ளிச் சென்ற பிள்ளைகள் மாலை வீட்டுக்கு வரவில்லை. இதனால், ஜீவாவின் பெற்றோர், மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அப்போது கெஜலட்சுமியும் ராஜேசும் பள்ளிக்கு வரவில்லை என்று நிர்வாகம் கூறியுள்ளது.
இதையடுத்து, ஜீவாவின் பெற்றோர், மகனையும், பேரப்பிள்ளையும் உறவினர் வீடுகளில் தேடி வந்தனர். இந்த நிலையில், மோர்தானா அணைப் பகுதியில் ஜீவானந்தத்தின் பைக் மற்றும் பிள்ளைகளின் புத்தகப் பைகள் இருந்ததை நேற்று காலை சிலர் பார்த்துள்ளனர். இதனை ஜீவாவின் பெற்றோரிடமும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஜீவாவின் பெற்றோர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஜீவா, கஜலட்சுமி மற்றும் ராஜேஷ் ஆகிய மூன்று பேரின் சடலங்களை மீட்டனர்.
இது குறித்து ஜீவாவின் தந்தை லட்சுமணன் குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.