திருவாரூர்
பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற கோரி திருவாரூரில் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு கடந்த மாதம் 20-ஆம் தேதி பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியதை திரும்ப பெற கோரி அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தமிழக அரசு, பேருந்து கட்டணத்தை கனத்த இதயத்தோடு பைசா கணக்கில் கட்டணத்தை குறைத்து மக்களை முட்டாளாக்கியது.
இந்த கட்டண குறைப்பு பயன்தராது என்றும், பேருந்து கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்கள் வலுவாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் அருகே உள்ள திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவிகள் போராட்டத்தில் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
"பேருந்து கட்டண உயர்வை முழுமையாக அரசு திரும்ப பெற வேண்டும்" என்று முழக்கங்களை எழுப்பினர். அப்போது மாணவ - மாணவிகள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலும் செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா காவலாளார்கள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து மாணவ - மாணவிகள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.