
திருநெல்வேலி
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் 10 தொகுதிகளில் வெற்றிப் பெறும் வகையில் பணிகளைத் தொடங்கிவுள்ளோம் என்று மாவட்டச் செயலாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டுள்ளதையொட்டி தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர் மன்றங்கள், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
மாநிலப் பொறுப்பாளர் சுதாகர், திருநெல்வேலி மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நேற்று முன்தினம் நியமித்தார்.இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திருநெல்வேலியில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ரஜினி மக்கள் மன்ற திருநெல்வேலி மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் திருநெல்வேலி நகர மேற்கு ரதவீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்பு வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காமராஜர், அண்ணா, முத்துராமலிங்க தேவர், பாளையங்கோட்டையில் உள்ள அழகுமுத்து கோன், வ.உ.சி., பெரியார், ஒண்டிவீரன் உள்ளிட்ட தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் குமரகுரு, தங்கதுரை, தளபதி முருகன், இளைஞர் அணி செயலாளர்கள் தாயப்பன், பகவதி ராஜன், தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திகேயன், மீனவர் அணி செயலாளர் ஆல்ரின், விவசாய அணி செயலாளர் ஆறுமுகம், வக்கீல் அணி ஜாகீர் உசேன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் செல்வகுமார், "ரஜினி மக்கள் மன்றம் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் பணி செய்து வருகிறது. இதனால் மக்கள் அதிகளவில் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்து வருகின்றனர்.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் 10 தொகுதிகளில் வெற்றிப் பெறும் வகையில் பணிகளைத் தொடங்கிவுள்ளோம்.
இதனையொட்டி வருகிற 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு திருநெல்வேலியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. எனவே, இந்த கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.