மக்கள் குறைதீர்க்கும் நாளில் எங்கள் குறையையும் தீருங்கள் - மாற்றுத் திறனாளிகள் ஆட்சியரிடம் மனு…

First Published Jul 4, 2017, 8:09 AM IST
Highlights
solve our problems too disabled persons petition


பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளியை மணந்த மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் உள்ள எழுத்தர் பணியிடங்கள், அங்கன்வாடி பணியிடங்கள் போன்றவற்றில் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்று ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலக பிரதானக் கூட்டரங்கில் நேற்று நடைப்பெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறுக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மக்கள் ஆட்சியரிடம் நேரடியாக கொடுத்தனர்.

இந்த மனுக்களின்மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் அளித்த மனு:

“இந்திரா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மக்களுக்கு பணிவாய்ப்பு மறுக்கப்படுவதை தடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளியை மணந்த மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் உள்ள எழுத்தர் பணியிடங்கள், அங்கன்வாடி பணியிடங்கள் போன்றவற்றில் முன்னுரிமை வழங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், “எங்கள் ஊரில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர்ப் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பை தடுக்கும் விதமாக ஊரின் சுடுகாட்டு பகுதியை வேலியிட்டு பாதுகாக்க வேண்டும். மேலும், ஊரின் நடுவே உள்ள பழமை வாய்ந்த புளியமரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

மனுக்களைப் பெற்று கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி பாஸ்கரன், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) செல்வராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் உள்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். 

click me!