செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 31ஆவது முறையாக நீட்டிப்பு!

By Manikanda PrabuFirst Published Apr 4, 2024, 4:21 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 31ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டக் கொண்டே வருகிறது. அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வருகிற 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 31ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மூன்று முறை தள்ளுபடி செய்துவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில், சாதாரண ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றமும் ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சரக்கு பாட்டிலுக்கு வீரன் என்று பெயர் வைத்ததுதான் திமுகவின் சாதனை: திலகபாமா காட்டம்!

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேபோல், தனக்கு எதிரான வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டதுடன், கீழமை நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரணையை முடிக்க இடைக்கால தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!