காவல்துறையின் தனிப்படைகளைத் தேடி பிடிக்க ஒரு தனிப்படை அமைக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் அவல நிலை- சீமான்

By Ajmal KhanFirst Published Jan 30, 2024, 2:04 PM IST
Highlights

கொள்ளையர்களைத் தேடி பிடிக்கவும் புதிதாக ஒரு தனிப்படை என ஒவ்வொரு முறையும் தனிப்படை அமைக்கப்படுகிறதே ஒழிய குற்றவாளிகளைப் பிடித்தபாடில்லை. இதுவரை அமைக்கப்பட்ட தனிப்படைகளைத் தேடி பிடிக்க ஒரு தனிப்படை அமைக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை என சீமான் தெரிவித்துள்ளார். 

அச்சத்துடன் வாழும் மக்கள்

நாம் தமிழர் நிர்வாகி வீட்டில் புகுந்து கொள்ளையடித்து விட்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள கல்லுவழி கிராமத்தில் வசிக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அன்பு இளவல் ஜேக்கப் பாரி அவர்களின் வீடு புகுந்த கொள்ளையர்கள் கடந்த 26ஆம் தேதி அதிகாலையில் அவரது குடும்பத்தினரை அரிவாளால் வெட்டி,

Latest Videos

நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சாதிய வன்முறைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள்  நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வரும் கொடுமையான சூழல் நிலவுகிறது. 

தனிப்படையை கண்டுபிடிக்க ஒரு தனிப்படை

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற ஒன்று தமிழ்நாட்டில் செயல்படுகிறதா என சந்தேகப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு என்பதே முற்றாக சீரழிந்துள்ளது. வேங்கைவயல் குற்றவாளிகளைப்  பிடிக்க தனிப்படை, ஆதித்தமிழ்க்குடி பெண்ணை கொடுமைபடுத்திய பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் மற்றும் மருமகளை பிடிக்க தனிப்படை, கன்னியாகுமரியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி அன்புத்தம்பி சேவியர் குமாரை கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை என்ற வரிசையில்,

தற்போது அன்பு இளவல் ஜேக்கப் பாரி அவர்களின் வீடு புகுந்து தாக்கி கொள்ளையடித்த கொள்ளையர்களைத் தேடி பிடிக்கவும் புதிதாக ஒரு தனிப்படை என ஒவ்வொரு முறையும் தனிப்படை அமைக்கப்படுகிறதே ஒழிய குற்றவாளிகளைப் பிடித்தபாடில்லை. இதுவரை அமைக்கப்பட்ட தனிப்படைகளைத் தேடி பிடிக்க ஒரு தனிப்படை அமைக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை.

குற்றவாளியை கைது செய்யுங்கள்

ஆகவே, காவல்துறையைத் தமது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்படுத்த வேண்டுமெனவும், சிவகங்கை கல்லுவழி கிராமத்தைச் சேர்ந்த அன்பு இளவல் ஜேக்கப் பாரி அவர்களின் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதாக சீமான் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

கோவையில் வீட்டில் தனியாக இருந்த திருநங்கை கொடூரமாக வெட்டி படுகொலை - போலீஸ் விசாரணை

click me!