ஆளுநருக்கான தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார்...! தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்- வைகோ

By Ajmal KhanFirst Published Jun 13, 2022, 10:47 AM IST
Highlights

தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பிறவி பேதத்தை கற்பிக்கும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசும் ஆளுநர் ரவி, அந்தப் பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி,  ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். ஒரே பரமேஸ்வரன், ஒரே கடவுள். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதை தான் நமது மார்க்கம் கூறுகிறது. இந்திய அரசியலமைப்புதான் நமது ஆன்மா. வேற்றுமையில் ஒற்றுமை என நாம் நம்மை பற்றி கூறுகிறோம். அதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய அரசியலமைப்பு, சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. கிமு 2ஆம் நூற்றாண்டில் புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை. சனாதன தர்மம்தான் பாரதத்தை உருவாக்கியது. நமது நாட்டின் எண்ணம், செயல் போன்றவற்றில் சனாதானம் உள்ளது. மற்ற நாடுகளைப் போல ராணுவ வீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாட்டை உருவாகவில்லை. இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ராணுவம் பொருளாதாரத்தில் வளர்ச்சியை போல ஆன்மீகத்தில் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.  இந்தநிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒரு நபர் அரசியலமைப்புச் சட்ட நெறிகளை மீறி, சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது என்று பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளார். 

தகுதியை ஆளுநர் இழந்து விட்டார்

மனித சமத்துவத்தை மறுக்கும் வருணாசிரம தருமத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்  சங்பரிவாரங்களின் கோட்பாட்டை தூக்கிப்பிடித்து பெருமை பொங்க பேசி உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தான் யார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியாவை வழிநடத்துவது அண்ணல் அம்பேத்கர் வடித்தெடுத்த அரசியல் அமைப்பு சட்டமே தவிர, நால்வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மம் அல்ல. ஆளுநர் ரவி  தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற  குறள் நெறியை உலகுக்குத் தந்த தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பிறவி பேதத்தை கற்பிக்கும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசும் ஆளுநர் ரவி, அந்தப் பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார். உடனடியாக குடியரசு தலைவர் தமிழக ஆளுநரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் என வைகோ அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆளுநரின் பேச்சின் பின்னனியில் பலத்த சந்தேகம்.!சதிச்சிந்தனைகளுக்கு தூபம் போடுகிறது-டி.ஆர்.பாலு ஆவேசம்

click me!