தலைக்குப்புற கவிழ்ந்த பள்ளி வேன்; பலத்த காயத்தோடு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி...

First Published Jun 20, 2018, 1:17 PM IST
Highlights
school van collapsed Students heavy injured admitted in hospital


நாமக்கல்
 
நாமக்கல்லில் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் தலைக்குப்புற கவிழ்ந்ததில் 10 மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்தனர். 

நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எருமப்பட்டி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் வந்துசெல்ல பெற்றோர் தரப்பில் வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி உள்ளனர். 

இந்த வேன் ஓட்டுநர் ஜெயராம் (58) தினசரி காலையில் குழந்தைகளை பள்ளிக்கு கொண்டுவந்து விட்டுவிட்டு மீண்டும் மாலையில் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.

வழக்கம்போல நேற்று மாலை பள்ளிக்கு வந்து 25 மாணவ, மாணவிகளையும் ஏற்றிக்கொண்டு, எருமப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். நாமக்கல் அருகே உள்ள தூசூர் சம்பாமேடு பகுதியில் சென்றபோது திடீரென வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், அந்த வேன் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த மாணவ, மாணவிகள் பயத்தில் அலறினர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் மாணவ, மாணவிகளை மீட்டு நாமக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த சுபஸ்ரீ (10), நித்ய ராகவன் (10), தனிஷ்கா (14), ஹரினி (8), சூரியதேவ் (4), தர்னிஷ் (10), லோகேஷ் (7), வர்ஷா (5), பிரதீவ் (11) உள்பட 10 மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர். இவர்கள் நாமக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 

இந்த விபத்து குறித்து நாமக்கல் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!