
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்துவரும் 2 நாட்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தேனி மற்றும் நெல்லை மாவட்டங்களிலும் , மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. ஆனால் சென்னையில் கடந்த ஒரு வாரமாக வெயில் கடுமையாக வாட்டி எடுத்து வருகிறது.
இந்நிலையில், பருவமழை சற்று குறையத் தொடங்கி இருப்பதால், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூலில் , ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இன்று இரவுகூட மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் கடற்கரை காற்று மாலைநேரத்தில் நிலப்பரப்பை நோக்கி வீசும் போது, மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியிள்ளார்.
ஒருவேளை இன்று மாலை மழை பெய்யாவிட்டால் இரவோ அல்லது நாளையோ பெய்யக்கூடும் என கூறியுள்ள பிரதீப் ஜான், வெப்பச்சலன மழை சென்னையில் இன்றுமுதல் தொடங்கும் என்றும், ஆதலால், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய பகுதிகளில் இடியுடன் மழை அடுத்து வரும் நாட்களில் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சென்னையில் வெப்பச்சலனத்தால் மழை பெய்யும் சூழல் சாதகமாக இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழை பெய்யும்பட்சத்தில் மற்ற மாவட்டங்களில் மழை இருக்காது என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.