
போதையில் கார் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நடிகர் ஜெய்க்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் பார்ட்டி படப்பிடிப்பு முடிந்ததைக் கொண்டாடும் விதமாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் உணவு விடுதியில் பார்ட்டி கொண்டாடிவிட்டு அதிகாலை காரில் சென்றார் நடிகர் ஜெய்.
அவர் சென்ற கார் நிலை தடுமாறி அடையாறு பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. அவர் குடிபோதையில் கார் ஓட்டினார் என்பது தெரியவந்ததால், போலீஸார் அவருக்கு ரூ. 500 அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் அவர் மீது குடிபோதையில் கார் ஓட்டியது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது, லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டியது, போன்ற 4 பிரிவுகளின் கீழ் அடையார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து குடிபோதையில் வாகனம் ஓட்டி, விபத்தும் ஏற்படுத்தியது தொடர்பாக நடிகர் ஜெய்க்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் ஜெய் விளக்கமளிக்க ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் நடிகர் ஜெய்க்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.