தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா..? 100க்கு டயல் பண்ணுங்க… சங்கர் ஜிவால் அட்வைஸ்

By manimegalai aFirst Published Oct 30, 2021, 9:47 PM IST
Highlights

தீபாவளிக்கு ஊருக்கு போக உள்ளவர்கள் 100க்கு சொல்லிவிட்டு சென்றால் இரவு நேரத்தில் அவர்களினன் வீடுகள் கண்காணிக்கப்படும் எனறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை: தீபாவளிக்கு ஊருக்கு போக உள்ளவர்கள் 100க்கு சொல்லிவிட்டு சென்றால் இரவு நேரத்தில் அவர்களினன் வீடுகள் கண்காணிக்கப்படும் எனறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று காவலர் வீர வணக்க மணல் சிற்பத்தை பார்வையிட்டார். சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சிற்பத்தை பார்வையிட்ட பின்னர் கொரோனா காலத்தில் பணியின்போது உயிரிழந்த 33 காவலர்கள் மற்றும் காவல்துறை  பணியாளர்களின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கர் ஜிவால் கூறியதாவது:  கொரோனா காலத்தில் மாநகர காவல்துறையில் உயிர் நீத்த குடும்பத்தாரின் குறைகளை கேட்டறிந்து வருகிறோம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டும் வெடி வெடிக்கப்படுவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாலும் இதற்கு பொதுமக்களின்  ஒத்துழைப்பு தேவை. கடந்த ஆண்டு நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 383 பேர் மீது வழக்கு பதிவானது , இந்த ஆண்டும் வழக்கு பதிவு செய்யப்படும்.

சென்னையில் தீபாவளியன்று 18,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். Lock house system எனும் நடைமுறை தற்போதும் அமலில் உள்ளது. அதன்படி தீபாவளிக்கு வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால்  காவல் கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்து கொண்டு இரவில் அந்த குறிப்பிட்ட வீட்டை கண்காணிப்போம்.

அடுத்த மாதம்  Lock house protest system எனும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது . அதன்படி Appல் பதிவு செய்பவர்களின் வீடு இரவில் மூன்று முறை கண்காணிக்கப்படும். இதற்கென தனி செயலியையும் உருவாக்கி வருகிறோம். ஒரு மாதத்தில் அந்த செயலி அறிமுகம் செய்யப்படும்.

தீபாவளிக்கு வெளியூர்  செல்பவர்கள் எண் 100 அல்லது அருகில்  உள்ள காவல் நிலையங்களில் தகவல் தெரிவித்து விட்டு சென்றால் ரோந்து காவலர்கள்  மூலம் அந்த வீடு இரவில் கண்காணிக்கப்படும். கொரோனாவின் போது உயிரிழந்த காவலர்களில் 80-85 விழுக்காடு குடும்பத்தினர்களுக்கு  நிவாரணம்  வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஆம்னி பேருந்துகள் பயணிக்க வழித்தடம் குறித்து கூறப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து காவலர்களும் ,  ரோந்துக் காவலர்களும் ஆம்னி பேருந்து கட்டணம் தொடர்பாக புகார் வந்தால் அப்பகுதிக்கு சென்று பேருந்தில் உடனடியாக சோதனை மேற்கொள்வர்.

கே.கே நகரில் நடைபெற்ற கொலைச் சம்பவம் நகையை களவு செய்வதற்காக நடைபெற்றுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார்.

பொதுவாக பண்டிகை நாட்களில் வீட்டை பூட்டிவிட்டு செல்வோரின் வீடுகளில் கொள்ளை நடப்பது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பான புகார்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவாகி வருகிறது. ஆகையால் தான் இந்த Lock house protest system நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!