நவம்பர் 3 மற்றும் தீபாவளி நாளான நவம்பர் 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூட வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
நவம்பர் 3 மற்றும் தீபாவளி நாளான நவம்பர் 4 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூட வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கொரோனா காலம் என்ற போதிலும் அரசு எடுத்து வரும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவற்றால் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை குறைவே என்று சொல்லலாம்.
தொடர்ந்து பாதிப்புகள் இறங்கு முகமாக இருந்த காரணத்தினால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கொண்டே வந்தன. ஒரு கட்டத்தில் தியேட்டர்களும் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் இயங்கலாம் என்ற அனுமதியை தமிழக அரசு தந்துள்ளது.
இப்போது இந்த அனுமதிக்கு வேட்டு வைக்கும் விதமாக உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தியேட்டர் உரிமையாளர்களையும் மட்டுமல்ல சினிமா ரசிகர்களின் தூக்கத்தையும் கெடுக்க தொடங்கி இருக்கிறது.
அதாவது உயர்நீதிமன்ற கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வரும் 3ம் தேதி… தீபாவளி பண்டிகைக்கு முந்தின நாள் மற்றும் தீபாவளி நாளான நவம்பர் 4ம் தேதி ஆகிய இரு நாட்களிலும் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களை மூட வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
இந்த வழக்கை தூத்துக்குடியை சேர்ந்த சிவமுருகன் ஆதித்தன் என்பவர் தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள தமது மனுவில் கூறி இருப்பதாவது:
தமிழகம் முழுவதும் தற்போது திருவிழாகாலமாக இருக்கிறது. இந்த தருணத்தில் அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுவார்களா என்பது சந்தேகமே.
பாதிப்புகள் குறைந்ததால் தான் தியேட்டர்கள் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் இயங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படவில்லை.
இப்படிப்பட்ட தருணத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டால் அது கொரோனா தொற்றுகளை மீண்டும் தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்பாக மாறிவிடும். தியேட்டர்களில் சமூக இடைவெளி என்பது குறைந்து போகும்.
கடந்த அலையின் போது மாஸ்டர் பட வெளியீடு தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இந்தாண்டு தீபாவளியன்று அண்ணாத்த உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களில் வெளியாகின்றன. கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுக்க இது மேலும் வழிவகுக்கும். ஆகையால் தியேட்டர்களை 100 சதவீதம் இயங்கலாம் என்று அளிக்கப்பட்டு உள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3 மற்றும் தீபாவளி நாளான நவம்பர் 4 ஆகிய தேதிகளில் தியேட்டர்களை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. சிவமுருகன் ஆதித்தன் தொடர்ந்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.
ஒருவேளை நீதிமன்றம் தியேட்டர்களை மூட உத்தரவிட்டால் என்ன செய்வது என்பது தான் இப்போது தியேட்டர் உரிமையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் கவலையாக இருக்கிறது… குறிப்பாக ரஜினி ரசிகர்கள் இப்போதே கவலைப்பட ஆரம்பித்துள்ளனர்.
ரஜினிகாந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏற்கனவே படு அப்செட்டில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட தருணத்தில் தியேட்டர்களை மூட கோரி தொடரப்பட்டுள்ள விவகாரம் ரசிகர்களை ஏகத்துக்கும் அதிர்ச்சியை தருவதாக உள்ளது.