4 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்… எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்!!

By Narendran SFirst Published Oct 30, 2021, 4:19 PM IST
Highlights

கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகனமழைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இதுக்குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும். இன்று (30.10.2021) கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். ஆகவே அந்த நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (31.10.2021) கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினர், கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் 18 செ.மீ. மழையும், பரங்கிப்பேட்டை மற்றும் துாத்துக்குடியில் தலா 17 செ.மீ. மழையும், ஒட்டப்பிடாரம் மற்றும் திண்டிவனத்தில் தலா 13 செ.மீ. மழையும், காரைக்கால், செஞ்சி மற்றும் எண்ணுாரில் தலா 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல், கேளம்பாக்கம், வானுார், காயல்பட்டினம் மற்றும் வாலிநோக்கத்தில் தலா 9 செ.மீ. மழையும், தாம்பரம், அம்பத்துார், கடம்பூர், பாளையம்கோட்டை, கயத்தாறு, மரக்காணம், மஞ்சளாறு மற்றும் கடலுாரில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இன்று முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல் இன்று முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை தென்கிழக்கு அரபிக் கடலை ஒட்டிய தெற்கு கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.

click me!