ஆட்சியர் காலை பிடித்து கதறிய விவசாயிகள்… கோவையில் பரபரப்பு!!

By Narendran SFirst Published Oct 30, 2021, 3:07 PM IST
Highlights

கோவை ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் ஆட்சியர் காலில் விழுந்து கதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் அத்திக்கடவு திட்டம் சுமார் 70 ஆண்டுகளுக்குப் பின், நிறைவேறும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் அன்னுார், மேட்டுப்பாளையம் தாலுகாக்களில், 6 கிராமங்களில், தொழிற்பேட்டை அமைக்க, 1,504 எக்டர் பரப்பு விவசாய நிலங்களை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அன்னுார், மேட்டுப்பாளையம் தாலுகாக்களில், 6 கிராமங்களில், தொழிற்பேட்டை அமைந்தால், 40க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, நிலம் கையகப்படுத்தக் கூடாது எனக்கூறி, அன்னுார் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த, சுமார் 200 விவசாயிகள், ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியை சமீரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். முன்னதாக கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு, ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அப்போது தொழிற்பேட்டை அமைக்கும் விவகாரம் குறித்தும் பேசப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் தொழிற்பேட்டை அமைத்தால் மக்கள் பாதிக்கப்படுவர் என்று தெரிவித்தனர். அதுமட்டுமின்றி சுமார் 200 விவசாயிகள் கோவை ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், அன்னூர் சுற்று வட்டார குக்கிராமங்களில் வசிக்கும் சுமார் 50,000 மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது . இங்கு நடைபெறும் விவசாய பணிகளை நம்பியே விவசாய கூலி தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் எங்களின் 70 ஆண்டு கனவுத் திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தினால் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வரும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் விவசாயிகள் நிலம் கையகப்படுத்துதல் என்பதற்கான முயற்சி எங்களின் மனதை இடிபோல் தாக்கி நிலை குலைய வைத்துள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்ற தீர்மானம் ஐந்து ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு தங்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 1000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் முதல்வருக்கு அனுப்பப்பட்டது. மேலும், ஜனநாயக வழியில் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி இப்பொருள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்நிலையிலும் எந்த முறையான அரசு அறிவிப்பும் வரவில்லை என்பது வருத்தத்திற்குரியது. எனவே விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது. தொழிற்பேட்டை திட்டம் ரத்து என்ற சட்ட பூர்வ அறிவிப்பு அரசு வெளியிட தாங்கள் ஆவன செய்ய உத்தரவு வழங்க வேண்டி கேட்டு கொள்வதாக குறிப்பிட்டிருந்தனர். அதை தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அனைவரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில், அன்னூர் வட்டாரத்தில் 4 வருவாய் கிராமங்கள், மேட்டுப்பாளையம் வட்டாரத்தில் 2 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 3800 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் இந்த பகுதி விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கிடையே குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு கொடுக்க வந்த மூதாட்டி உள்பட விவசாயிகள் சிலர் ஆட்சியரின் காலில் விழுந்து, நிலங்களை கையகப்படுத்த வேண்டாம் என்று கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!