அரூரில் உரிமம் இல்லாமல் மணல் கடத்தியவர்களை கைது செய்து, அவர்களது இரண்டு லாரிகளையும் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் - திருப்பத்தூர் நெடுஞ்சாலை வழியாக அரசு அனுமதியின்றி லாரிகளில் மணல் எடுத்துச் செல்வதாக வருவாய்த் துறையினருக்கு புகார்கள் வந்த வண்னம் இருந்தன.
இதனையடுத்து, அரூர் வட்டாட்சியர் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினர் சேலம் நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரிகளை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அதில், உரிய அனுமதி இல்லாமல் மணல் எடுத்துச் செல்வது கண்டிப்பிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உரிமம் இல்லாமல் மணல் எடுத்துச் சென்ற இரண்டு லாரிகளையும் வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து லாரி ஓட்டுநர்கள் வரதன் மகன் பன்னீர்செல்வம் (45), ராமசாமி மகன் பாபு (34) ஆகியோரைக் கைது செய்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.