ஸ்கெட்ச் போட்டு எங்க கட்சிக்காரரை வெட்டி கொன்னுட்டாங்க! யாருக்கும் பாதுகாப்பு இல்லை! இபிஎஸ் சொன்ன பகீர் தகவல்!

By vinoth kumarFirst Published Jul 4, 2024, 12:13 PM IST
Highlights

சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதிக் கழகச் செயலாளர் சண்முகம் அவர்கள் நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கே மறைந்திருந்த கொலையாளிகள் அவரை வழிமறித்து கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர். 

சேலம் அதிமுக பிரமுகர் சண்முகத்தை கொலையாளிகள் அந்த பகுதியில் உள்ள தெரு விளக்குகளை துண்டித்தும், அங்குள்ள CCTV கேமராக்களை உடைத்தும் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரமான வெளியிட்டுள்ள அறிக்கையில்:  சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதிக் கழகச் செயலாளர் சண்முகம் அவர்கள் நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கே மறைந்திருந்த கொலையாளிகள் அவரை வழிமறித்து கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர். இவருக்கு மனைவி, திருமணமான மகள் மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர்.

சண்முகம் அவர்கள் தனது சிறு வயதிலேயே கழகத்தில் இணைந்து, சேலம் மாநகர் மாவட்டம், 55-ஆவது வட்டக் கழகச் செயலாளராகவும், தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டலாம்பட்டி பகுதிக் கழகச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர். மேலும், 2001-2006 மற்றும் 2011-2016 என்று இருமுறை சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலக் குழுத் தலைவராக திறம்பட பணியாற்றி உள்ளார். உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் முழு ஈடுபாட்டுடன் கழகப் பணியாற்றி மக்களிடத்திலும், கட்சித் தொண்டர்களிடத்திலும் அன்பாகப் பழகி நன்மதிப்பைப் பெற்றவர். அப்படிப்பட்ட ஒரு சிறந்த தொண்டரை இன்று நாம் இழந்துள்ளது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. சேலத்தில் பதற்றம்.. போலீஸ் குவிப்பு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினசரி கொலை, கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்று பலமுறை நான் கூறியபோதும், இந்த விடியா திமுக அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

நேற்று இரவு சுமார் 10 மணி அளவில், சண்முகம் தனது வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, கொலையாளிகள் அந்தப் பகுதியில் உள்ள தெரு விளக்குகளை துண்டித்தும், அங்குள்ள CCTV கேமராக்களை உடைத்தும், திட்டமிட்டு கொடூரமான முறையில் அவரை படுகொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இதையும் படிங்க:  EPS : ஜெயலலிதா படத்தோடு பாமக பிரச்சாரம்.! விக்கிரவாண்டி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி போட்ட முக்கிய உத்தரவு

கழகத்தின் தீவிர விசுவாசி அன்புச் சகோதரர் சண்முகம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

click me!