சபரிமலை ஐயப்பனுக்கு இன்று திருவாபரணங்கள் புறப்பாடு

First Published Jan 12, 2017, 9:31 AM IST
Highlights

சபரிமலை ஐயப்பனுக்கு மகரஜோதி நாளில் அணிவிக்க திருவாபரணங்கள் பந்தள அரண்மனையில் இருந்து இன்று புறப்படுகின்றன.
ஆண்டு தோறும் மகர சங்கராந்தி நாளன்று பந்தள அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் கொண்டுவரப்பட்டு, சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

இந்தாண்டு திருவாபரணங்கள் இன்று காலை 5 மணிக்கு அரண்மனையிலிருந்து வெளியே எடுத்து வைக்கப்பட்டது. மதியம் 12 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதன்பின்னர், பந்தள மன்னர் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட சசிகுமார்வர்மா வாள் ஏந்திச் செல்ல, திருவாபரணங்கள் புறப்பாடு நடைபெறும்.

இதையடுத்து வழியக் கோயில் ஐயப்பன் சன்னதியில் பூஜைகள் நடத்தப்பட்டு, ஐயப்பனுக்கு உரிய திருவாபரணங்கள் ஒரு பெட்டியிலும், மாளிகைப்புறம் மஞ்சமாதாவுக்கான கொடிப்பட்டம் திருவாபரணம் மற்றொரு பெட்டியிலும், வழித்தேவைக்கு தேவையான பொருள்கள் மற்றொரு பெட்டியிலும் வைத்து அடைக்கப்படும்.

இதையடுத்து, வானில் கருடன் வட்டமிட்டதும் 16 பேர் இந்தப் பெட்டிகளை சுமந்துகொண்டு புறப்படுவர். அயலூர், வாகா சத்திரம் வனப் பகுதி வழியாகச் சென்று நாளை மறுநாள் (ஜனவரி 14) மாலை திருவாபரணங்கள் சபரிமலை சென்றடையும். அங்கு, 18 படி அருகே மேல்சாந்தியிடம் மன்னர் பிரதிநிதி திருவாபரண பெட்டியை ஒப்படைப்பார்.

பின்னர், திருவாபரணங்கள் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, மூலவர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரியும். அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு காத்திருப்பார்கள் என்பதால், பந்தள மன்னர் பிரதிநிதி அன்று சுவாமி தரிசனம் செய்வதில்லை. ஜனவரி 20ம் தேதி காலை பந்தள மன்னர் பிரதிநிதிக்கு மட்டும் ஐயப்பன் தரிசனம் தரும் நிகழ்வு நடைபெறும்.

click me!