
ஈரோடு
ஈரோட்டில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் டல் அடித்தன. மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் ஈரோடு மாவட்டத்திலும் நடந்தது. அதன்படி, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.
இந்தப் போராட்டத்தின்மூலம் "ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவறை எழுத்தாளருக்கான அரசு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும்" என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் டல் அடித்தன. ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அடைக்கப்பட்டு இருந்ததால் அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் பாஸ்கர்பாபு இதுகுறித்து, "ஊராட்சி செயலாளருக்கு அரசு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊதியத்தை வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 899 அதிகாரிகள் வேலை செய்து வருகிறார்கள். இதில் 744 பேர் தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர்.
வருகிற 21–ஆம் தேதி கோயம்புத்தூரில் சங்கப் பேரவைக் கூட்டம் நடக்கிறது. அதில் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.