"தடுப்பூசியால் சிறுவனுக்கு புற்று நோய் ஏற்படவில்லை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

First Published Mar 27, 2017, 1:04 PM IST
Highlights
rubella is not the reason for cancer tn government answers HC


ஈரோடு சிறுவனக்கு தடுப்பூசி போட்டதால் புற்றுநோய் கட்டி ஏற்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 

ஈரோடு மாவட்டம் கொமரபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். கூலித் தொழிலாளியான, இவரது மகன் அன்பரசு(வயது 6) பிறந்த 6 ஆவது மாதத்தில் அம்மை தடுப்பூசி தொடையில் போடப்பட்டது.

ஆரம்பத்தில் சிறிய ரத்தக்கட்டு போன்று கட்டி உருவானது. மருத்துவர்களை சந்தித்த போது நாளடைவில் சரியாகி விடும் என்று அனுப்பி வைத்தனர். 

ஆனால் அந்த ரத்தக்கட்டி சரியாகாமல் நாளடைவில் வளர்ந்து தற்போது 3 கிலோ எடையில் புற்று நோய் கட்டியாக உருவாகியுள்ளது.  நாளிதழ்களில் வெளியான இச்செய்தி ஆதாரமாகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

மேலும் சிறுவனக்கு ஏற்பட்ட புற்று நோய் குறித்து  தமிழக சுகாதாரத்துறை செயலாளர், ஈரோடு மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், குழந்தைகள் நலவாரிய ஆணையர் ஆகியோர் 27-ந்தேதிக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்திலோ அல்லது வேறு ஏதேனும் மருத்துவமனையிலோ சேர்த்து சிகிச்சைக்கான மொத்த செலவையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்திருந்தனர். 

இதற்கிடையே அம்மை தடுப்பூசி போட்டதால் சிறுவனக்கு புற்றுநோய் ஏற்படவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அன்பரசன் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் எய்ம்ஸ் நிர்வாகம் பதிலளிக்குமாறு தெரிவித்துள்ளது. 

click me!