தமிழகத்தில் மழை பொய்த்து போனதால், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி தமிழக அரசு ஆறு, ஏரி, குளங்களில் மணல் அள்ள தடை விதித்தது. மேலும், மணல் குவாரிகளை மூடி உத்தரவிட்டது. இதற்கிடையில், திமுக சார்பில் மழைநீர் சேமிக்க குளங்களை தூர் வாரி வருகின்றனர்.
இதை தொடர்ந்து தண்ணீர் ஆவியாகாமல் இருக்க வைகை அணையில் தெர்மா கோல் மிதக்கவிடப்பட்டது. அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் கமான்ட்களை வாரி இரைத்தனர்.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த ஹக்கிம் என்பவர், 'தெர்மோகோல் திட்டம்' குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்களை கேட்டு மனு செய்தார்.
இதுதொடர்பான மனு, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை, பரிசீலனை செய்த பொதுப்பணி துறை, அதற்கான தகவல்களை அனுப்பியுள்ளது.
பொதுப்பணி துறை சார்பில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில், 'திட்டம் ஏதும் தயார் செய்யப்படவில்லை. வைகை அணையில் 60 தெர்மோகோல் அட்டைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன' என பதில் அளித்துள்ளது.
இத்திட்டத்தை முன்னின்று நடத்திய அதிகாரியின் பெயரை கேட்டதற்கு, 'முன்னின்று நடத்திய அலுவலர் யாருமில்லை’.
வேறு அணைகளில் இதுபோன்ற திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதா?' என்ற கேள்விக்கு, 'இது சம்பந்தமான விபரம் இல்லை' எனவும், பதில் அளித்துள்ளது.