தண்ணீரை பாதுகாப்பு இல்லாமல் வைத்திருந்தால் ரூ.5000 அபராதம், ஆறு மாதங்கள் சிறை – ஆட்சியரின் டெங்கு தடுப்பு நடவடிக்கை…

First Published Oct 10, 2017, 7:29 AM IST
Highlights
Rs 5000 fine six months imprisonment dengue preventive measures of the government ...


இராமநாதபுரம்

டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை மூடி வைக்காமல் பாதுகாப்பின்றி வைத்திருப்பவர்களிடம் அதிகபட்சமாக ரூ.5000 அபராதம் மற்றும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் நடராஜன் எச்சரித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணியை மாவட்ட ஆட்சியர் நடராஜன் தீவிரப்படுத்தி உள்ளார்.

ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் இராமநாதபுரம் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர், மருத்துவ இணை இயக்குனர் மற்றும் ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர், மாவட்ட மலேரியா அலுவலர், நகராட்சி துப்புரவு அலுவலர் ஆகியோர் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர டெங்கு தடுப்பு பணியை ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் டெங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் சிங்காரத்தோப்பு பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது அங்கு புதிதாக கட்டிடம் கட்டிவரும் இரண்டு இடங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தத் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் உத்தரவின்பேரில் நகராட்சி மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தலா ரூ.1500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை மூடி வைக்காமல் பாதுகாப்பின்றி வைத்திருக்கும் நபர்களிடம் அதிகபட்சமாக ரூ.5000 அபராதம் மற்றும் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

click me!