
மதுரை
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ரூ.3 கோடி மோசடி செய்ததாக அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று விளக்கம் அளிக்குமாறு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் என்.பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த சபாபதி, மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருந்ததாவது:
“எஸ்.வி.ஆர். டிராவல்ஸ், நில புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். திண்டுக்கல் ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் அணி துணைச் செயலாளராகவும் உள்ளேன்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் கடந்த 2010–ஆம் ஆண்டு அறிமுகம் ஆனேன். அவருடைய அரசியல் பணிக்காகவும் தொழில் அபிவிருத்திக்காகவும் நான் அவருடன் இணைந்து பணியாற்றினேன்.
அவருடைய தேவைக்காக என்னிடம் பணம் வாங்கி திருப்பி கொடுத்து வந்தார். 2011–ஆம் ஆண்டு நத்தம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகத் தேர்வுச் செய்யப்பட்டு அமைச்சர் பதவி பெற்றார். அதன்பின் அவருடைய செல்வாக்கு உயர்ந்ததால், நாள்தோறும் கோடிக்கணக்கான ரூபாய் பணப்புழக்கம் நடந்து வந்தது.
அவருடைய நண்பர்கள், உறவினர்கள் என யாருக்கு பணம் தேவைப்பட்டாலும் என்னிடம் வாங்கிக் கொடுப்பார். அவரது நம்பிக்கைக்கு உரிய நபராக நான் இருந்து வந்தேன்.
இந்த நிலையில் 2014–ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்காக என்னிடம் பணம் வாங்கித்தான் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செலவு செய்தார்.
அந்த தொகையில் ரூ.2 கோடியே 97 லட்சத்து 90 ஆயிரத்து 700–ஐ திருப்பித் தராமல் இழுத்தடித்து வருகிறார். பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு பலமுறை கேட்டும் பலனில்லை.
இந்த மோசடி குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்துப் பணத்தைப் பெற்றுத்தர உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில் இந்த மனு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவுப் பிறப்பித்தார். பின்னர் விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்தார்.