
கரூர்
கரூரில் பேசிய தம்பிதுறை. "தமிழக அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி வரவேண்டி உள்ளது. அதைப் பெற்று தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்" என்றார்.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள சேமங்கியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் ஒன்றிய அதிமுக சார்பில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் தொகுதி செயலாளர் திருவிக, கோம்புபாளையம் ஊராட்சி செயலாளர் ரங்கநாதன், திருகாடுதுறை ஊராட்சி செயலாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேட்டமங்கலம் ஊராட்சி செயலாளர் முனுசாமி வரவேற்றார்.
இதில், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற துணை சபாநாயகரும், கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமை கழக பேச்சாளர் நடிகர் ராமராஜன் ஆகியோர் பங்கேற்றனர்,
கட்சி கொடியை ஏற்றி வைத்துவிட்டு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது: "மத்திய அரசு இப்போது பட்ஜெட்டில் அறிவித்துள்ள திட்டங்களை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அத்திட்டங்கள் தற்போது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பசுமை வீடுகள் திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு கோடியே 80 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் மக்களின் கோரிக்கையை ஏற்று தவுட்டுப்பாளையம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட உத்தரவு வழங்கப்பட்டு தற்போது தடுப்பணை கட்டுவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
சின்னதாராபுரத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. ஆய்வு பணி முடிந்ததும் விரைவில் தடுப்பணை கட்டப்படும்.
அரவக்குறிச்சி தொகுதியில் சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை செய்யப்பட்டது. அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த செந்தில்பாலாஜிக்கு நீங்கள் வாக்களித்தீர்கள். ஆனால், அவர் ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதற்காகவும், சின்னத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவும் செயல்பட்டு வருகிறார். அவர் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அரவக்குறிச்சி தொகுதிக்கு செந்தில்பாலாஜி எதுவும் செய்யவில்லை" என்று அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய தம்பிதுரை, "தமிழக அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி வரவேண்டிய நிலுவை தொகை உள்ளது. அதைப் பெற்று தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது" என்று பேசினார்.
இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், வேட்டமங்கலம் முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம், கூட்டுறவு வங்கி தலைவர் தியாகராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.