
வெளிநாட்டு, வெளி மாநிலங்களில் தமிழ்மொழியை வளர்க்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்.” என்று தெரிவித்தார்.
2021-2022-ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கையின்படி, அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்கு தொடர் செலவினமாக ரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், உலகில் சுமார் 94 நாடுகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். அந்நாடுகளில் அவர்கள் தமிழை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் உள்ளன. இதனால்,கற்பதற்கான வசதிகள் இல்லாமை, தமிழறிந்த ஆசிரியர்கள் இல்லாமை, தேவையான தமிழ்ப் பாடநூல்கள் இல்லாமை என இருக்கும் சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழ் கற்பிப்பதற்காக வசதியை ஏற்படுத்துதல், இணையத்தில் தமிழ் ஆசிரியர்கள் மூலம் கற்றுத்தருதல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல்,பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அனுப்பி வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல், தமிழை வெளிநாட்டு, வெளிமாநிலங்களுக்கு கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதி ஒடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழியாக கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அகரம் முதல் சிகரம் வரை பல படிநிலைகளாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு, சான்றிதழ் தேர்வு நடத்தவும் நவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் பரப்புரை கழகம் மூலம் தமிழ் மொழியின் பண்பாடு மற்றும் கலாச்சார பரப்புரை பணிகள் ஒலி - ஒளி உச்சரிப்புடன் பாடப்புத்தகத்தை வடிவமைப்பது உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.