
அனைத்து பள்ளிகளிலும் முழு வகுப்பும் நடத்தப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைந்து வருவதையடுத்து பிப்ரவரி 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆனால், பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், குறிப்பிட்ட சில மணி நேரங்கள் மட்டுமே வகுப்பு நடத்துவதாக புகார் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து, மாணவர்களை சுழற்சி முறையில், குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் தினமும் மூன்று பாட வேளைகளில் மட்டுமே பாடம் நடத்தி விட்டு, மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது. பல பள்ளிகளில் அரை நாள் மட்டுமே வேலை நாளாக பின்பற்றுவதாகவும், அதிலும் மாணவர்களை வரவைக்காமல் அலட்சியம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி உள்ள சுற்றறிக்கை;- ஒவ்வொரு பள்ளியும் மாணவர்களுக்கு வழக்கமான எட்டு பாட வேளைகளில் வகுப்புகளை நடத்த வேண்டும். முடிந்தவரை மாணவர்களை சற்று இடைவெளி விட்டு அமர வைத்து, அதேநேரம், முழு அளவில் மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து, பாடம் நடத்த வேண்டும். அரை நாள் மட்டும் பள்ளிகளை நடத்துவதும், ஓரிரு மணி நேரத்தில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவதும் நடக்க கூடாது; நடந்தால் கடும் நடவடிக்கை, தலைமை ஆசிரியர்கள் மீது பாயும்.
பாடங்களை முடிக்க மிக குறுகிய காலமே உள்ளதால், கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தாமல், பெயரளவில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து பள்ளிகளிலும் முழு நாளும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்த வேண்டும். பள்ளிக்கு வராத மாணவர்களையும் கண்டறிந்து, அவர்களையும் பள்ளிக்கு வர சொல்லி, நேரடி வகுப்பில் பங்கேற்க செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.