
வடசென்னையின் இதயப் பகுதியான ராயபுரம் தொகுதி, தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் ஒரு 'ஸ்டார்' அந்தஸ்து கொண்ட தொகுதி. ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த அதிமுகவின் மூத்த தலைவர் டி.ஜெயகுமார், தற்போதைய திமுக எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி ஆகியோருக்கு இடையிலான மோதல், வரும் 2026 ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் மீண்டும் ஒரு வரலாற்றுச் சமரை உறுதி செய்துள்ளது.
ஜெயகுமாரை சமாளிப்பாரா ஐட்ரீம் மூர்த்தி?
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், ராயபுரம் தொகுதியில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. 1991 முதல் ராயபுரத்தின் முகமாக இருந்த ஜெயகுமாரை, 27,779 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 'ஐட்ரீம்' மூர்த்தி வெற்றி பெற்றார். இந்தத் தோல்வி அதிமுகவிற்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தாலும், இந்த முறை ஜெயகுமார் மீண்டும் அதே தொகுதியில் களம் காண்பதில் உறுதியாக இருக்கிறார். அதேநேரம், கடந்த 5 ஆண்டுகளில் தான் செய்த நலத்திட்டங்களை முன்வைத்து ஐட்ரீம் மூர்த்தி இரண்டாவது வெற்றியை நோக்கி நகர்கிறார்.
ஐட்ரீம் மூர்த்தியின் 'வளர்ச்சிப் பட்டியல்'
திமுக தரப்பில் ஐட்ரீம் மூர்த்தியின் வெற்றிக்கான முக்கியக் காரணியாகக் கடந்த ஐந்தாண்டு காலச் சாதனைகள் முன்வைக்கப்படுகின்றன. தொகுதி மக்களின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டிருப்பது இவருக்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. ராயபுரம் மக்களின் 50 ஆண்டுகாலக் கனவான போஜராஜன் நகர் சுரங்கப்பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் ₹45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன தொழிலாளர் பயிற்சி மையம் தொகுதி இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
₹120 கோடி மதிப்பீட்டில் RSRM மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 300 புதிய படுக்கைகள் மற்றும் 38 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் ₹152 கோடியில் பிரம்மாண்ட ஆர்த்தோ (Ortho) பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ₹25 கோடி மதிப்பில் புதிய பள்ளிக் கட்டிடங்கள், ஐஏஎஸ்/ஐபிஎஸ் பயிலும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி மையம், நவீன நூலகங்கள் போன்றவை கல்வித் தரத்தை உயர்த்தியுள்ளன.
சுமார் ₹500 கோடி மதிப்பீட்டில் 3000-க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 3000 குடும்பங்களுக்குப் பட்டா வழங்கியது தொகுதி மக்களின் ஆதரவை இவருக்குத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.