
கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்ட காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் உடல் சென்னை கொண்டுவரப்பட்டது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி ஸ்ரீதர் மீது கொலை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஏற்கனவே பலமுறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
அப்படி ஒருமுறை ஜாமீனில் வெளிவந்தபோது ஸ்ரீதர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். துபாயில் இருந்த அவர், பின்னர் கம்போடியாவில் இருந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து அவரது உடலை சென்னை கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர். இந்நிலையில், ரவுடி ஸ்ரீதரின் உடல் கம்போடியாவில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது.
அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.