புல்லட்டில் விரட்டிச்சென்று புல்லட் நாகராஜை பிடித்த போலீஸ்... சினிமா காட்சிகளை மிஞ்சிய வீரதீர செயல்!

By vinoth kumarFirst Published Sep 10, 2018, 10:44 AM IST
Highlights

காவல் உயரதிகாரிகளை செல்போனில் மிரட்டிய பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் புல்லட் நாகராஜனை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவல் உயரதிகாரிகளை செல்போனில் மிரட்டிய பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் புல்லட் நாகராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். தென்கரையில் சர்ச் அருகே புல்லட்டில் சென்ற புல்லட் நாகராஜை ஜீப்பில் விரட்டிச் சென்று பெரியகுளம் டிஎஸ்பி மதனகலா பிடித்துள்ளார்.

முன்னதாக தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே  உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி புல்லட் நாகராஜன் (50). இவர் ஏற்கனவே மதுரை சிறைத்துறை பெண் எஸ்பி ஊர்மிளாவுக்கு வாட்ஸ் அப் மூலமாக, லாரியை ஏற்றி  கொலை செய்து விடுவோம் எனக் கூறி மிரட்டல் விடுத்தார். அடுத்து பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் செல்போனில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார். 

இந்த ஆடியோ பதிவுகள் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இவர் மீது மதுரை கரிமேடு மற்றும் பெரியகுளம் காவல் நிலையங்களில் வழக்குகள்  பதியப்பட்டன. மதுரையை சேர்ந்த தனிப்படை போலீசார்,  புல்லட் நாகராஜனை கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினர். இந்நிலையில் புல்லட் நாகராஜனின் அடுத்தடுத்த ஆடியோக்கள் வெளியாகி, அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

லாரி ஏற்றிக் கொன்று விடுவேன்’என்று மதுரை சிறைத்துறை எஸ்பிக்கும், ‘ஈ மொய்த்துக் கிடப்பாய்’என்று பெரியகுளம் பெண் இன்ஸ்பெக்டருக்கும் மிரட்டல் விடுத்த பேசிய அவர், நேற்று வெளியான ஆடியோவில் யாரையோ மிரட்டுவதும், அதில் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் எஸ்பி பாஸ்கரன் ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்து  பேசுவதும் உள்ளது. தேனி மாவட்டத்தில் கலெக்டர் என்ன  கிழிச்சுட்டார்? நான் நினைத்தால் கலெக்டரையே மாற்ற முடியும். எஸ்பியும் சரியில்லை. காவல்துறை அதிகாரிகள் செய்யும் அட்டகாசங்கள் குறித்து ஏராளமான  ஆதாரங்கள் என்னிடம்  உள்ளன. நானும் அவற்றை டிவிக்களில் வெளியிட முடியும். கேர்ஃபுல்லாக இருந்து கொள்ளுங்கள்...என்று பேசியுள்ளார்.

இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார்  தீவிரப்படுத்தியுள்ளனர். சொந்த ஊரான மேல்மங்கலம் அருகே உள்ள தோப்புகளில் அவர் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து  தனிப்படை போலீசாரில் ஒரு பிரிவினர் அங்கு விரைந்தனர். ஆனால் இதுதெரிந்து புல்லட்  நாகராஜன், அங்கிருந்து தப்பி மதுரை மாவட்டத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் புல்லட் நாகராஜனை போலீசார் கைது செய்துள்ளனர். தென்கரையில் சர்ச் அருகே  புல்லட் நாகராஜை  புல்லட்டில் விரட்டிச்சென்ற அவர்களை முந்திக்கொண்டு ஜீப்பில் முந்திச்சென்ற பெரியகுளம் டிஎஸ்பி மதனகலா மடக்கிப் பிடித்தார். இதையடுத்து அவர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். சினிமா காட்சிகளை மிஞ்ச இந்த சம்பவம்  பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!