சாலை பாதுகாப்பு சட்டம் செயல்படுத்தப்பட்டால் …!! டிரைவிங் லைசென்ஸ் எடுத்தவங்க மீண்டும் எடுக்கணும்… கடும் எதிர்ப்பு… ஆட்டோக்கள் இன்று வேலைநிறுத்தம்!!

First Published Aug 7, 2018, 9:51 AM IST
Highlights

மத்திய அரசு கொண்டுவந்துள்ள சாலை பாதுகாப்பு திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு

சாலை பாதுகாப்பு திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு திண்டாடி வருகிறது. இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மோட்டார் தொழிலில் தொடர்புடைய அனைத்து சங்க கூட்டமைப்பு இன்று  பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு  விடுத்துள்ளது. இதனையொட்டி எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று  சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் சாலை பாதுகாப்பு திருத்த மசோதா என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், அதில் உள்ள 64 பிரிவுகளில் ஒரு இடத்தில் கூட சாலை பாதுகாப்பு என்ற வாசகமே இல்லை. மோட்டார் வாகன தொழிலை முழுமையாக கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைப்பதற்காக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது.

மாநில உரிமையை பறிக்கும் இந்த மசோதாவை தமிழக அரசும் எதிர்த்து வருகிறது.இந்த மசோதா சட்டமானால் ஆர்டிஓ அலுவலகங்கள், தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூடப் பட்டு, கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்படும். தற்போதுள்ள ஓட்டுநர் உரிமங்கள் அனைத்தும் ரத்து செய்து, புதியதாக எடுக்க வேண்டி வரும். இருசக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங்களின் உரிமங்களும் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிவரும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஆகவே, ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்டவைகள் இன்று வேலை நிறுத்தத்தில்  ஈடுபட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும், 300 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ள இன்சூரன்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி இலவச ஜிபிஆர்எஸ் மீட்டர் வழங்க வேண்டும், ஆட்டோ கட்டணத்தை திருத்தி அமைக்க வேண்டும்,

பொதுபோக்குவரத்து அனைத்திற்கும் அரசே கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்,சுய தொழிலை அழிக்கும் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. மேலும் தமிழக  அரசே கூட்டுறவு முறையில் ஆட்டோக்களை இயக்க முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. 

click me!