போலீஸுக்கு பயந்து கிணற்றில் குதித்த குற்றவாளி; கை முறிந்த பரிதாபம்; மருத்துவமனையில் அனுமதித்த போலீஸ்...

First Published Aug 7, 2018, 8:53 AM IST
Highlights

கோயம்புத்தூரில் வாரண்டோடு வந்த போலீஸைப் பார்த்து பயந்து கிணற்றில் குதித்த குற்றவாளி தனது கையை முறித்துக் கொண்டார்.

கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் எல்லைக்குட்பட்டது கரவளி மாதப்பூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஈசுவரமூர்த்தி (42). இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 

இந்த நிலையில் கடந்த 2014-ஆம் வருடம் போடப்பட்ட வழக்கு ஒன்றில் குற்றவாளி ஈசுவரமூர்த்திக்கு வாரண்ட் கொடுக்கப்பட்டது. அந்த வாரண்ட் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஈசுவரமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று கருமத்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவலாளர்கள் நேற்று அவரது வீட்டுக்குச் சென்றார்.

போலீஸைப் பார்த்ததும் அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று ஓடினார் ஈசுவரமூர்த்தி. ஆனால், அவரை காவலாளர்கள்  பின்தொடர்ந்து ஓடினார். ஒருக்கட்டத்தில் போலீஸிடம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் ஈசுவரமூர்த்தி ஊரில் இருந்த கிணறு ஒன்றில் குதித்துவிட்டார். 

இதில், அவருக்கு வலது கை முறிந்தது. பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியோடு ஈசுவரமூர்த்தியை மீட்ட காவல்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர், அவரை கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சேர்த்தனர். அங்கு ஈசுவரமூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

போலீஸுக்கு பயந்து ஈசுவரமூர்த்தி கிணற்றில் குதித்து கையை முறித்துக் கொண்ட சம்பவம் இந்தப் பகுதியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

click me!